கல்லூரி மாணவனை கடத்திச் சென்று கொலை செய்தவர்களுக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த மேல்செங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன், சதீஷ்குமார், விக்னேஷ் மற்றும் அருள்குமார். இவர்கள் கல்லூரி நண்பர்கள் ஆவார்கள். கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பார்த்திபன், அருள்குமார் உள்பட 3 பேர்கள் ஒரே பைக்கில் திருப்பத்தூர் பகுதிக்கு சென்றனர்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பலியானார். அருள்குமரன்தான் பார்த்திபனை கொன்று விட்டதாக சக நண்பர்களான சதீஷ்குமார், விக்னேஷ் ஆகியோர் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
2013ம் ஆண்டு அருள்குமரனை கல்லூரியில் இருந்து கடத்திச் சென்று மேல்செங்கம் அருகே உள்ள பிஞ்சூர் காட்டுப்பகுதியில் மது குடிக்க வைத்து மரக்கட்டையால் அடித்துக் கொன்று விட்டு சகஜம் போல் தங்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.
கல்லூரிக்கு சென்ற மகன் வீடு திரும்பாததால் அருள்குமரனின் தந்தை மேல்செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சதீஷ்குமார் மற்றும் விக்னேஷ் இருவரும் அருள்குமாரை அழைத்துச் சென்றது கொலை செய்தது தெரிய வந்தது.
போலீசார் 2 பேரையும் கைது செய்து திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 12 ஆண்டுகள் வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
கூடுதல் மாவட்ட நீதிபதி கோபிநாத், சதீஷ்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு ஆள் கடத்தல் குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு குற்ற பொது வழக்கறிஞர் பழனி ஆஜராகி வாதாடினார்.
0 Comments