திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாதம் ரூ 1000 கல்வி உதவித் தொகையுடன் மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியானது கிரிவலப்பாதை, செங்கம் ரோடு, (நேரு யுவகேந்திரா அலுவலகம் பின்புறம்) சமுத்திரம் கிராமம், திருவண்ணாமலை 606 603, என்கிற முகவரியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளான 1. குரலிசை 2. நாதசுரம் 3. தவில் 4. தேவாரம் 5. பரதநாட்டியம் 6. வயலின் 7. மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்புகள் வாரநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்/பெண் இரு பாலரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சேர்க்கை கட்டணமாக முதலாம் ஆண்டிற்கு ரூ.350/- இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கட்டணமாக ரூ325/-மட்டும் செலுத்தப்படவேண்டும்.
மாணவ மாணவியருக்கு இலவச பேருந்து பயணச்சலுகை மற்றும் மாதந்தோறும் ரூ.1000/- அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது. இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும் நாதஸ்வரம், தவில் மற்றும் தேவாரம் பயின்ற திருக்கோயில்களில் பணிபுரியவும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை மாணவர்கள் வழங்கப்படுகிறது.
மேலும், 8-ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் மாவட்ட அரசு இசைப்பள்ளிகளில் சேர்ந்து பயின்று வரும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெரும் பொருட்டு, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் 10 ஆம் மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றமைக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 10 வது தேர்ச்சி பெற்றவர்கள் இசைக்கல்லூரிகளில் ஒரே ஆண்டு படித்து பட்டயம் பெற முடியும்.
விண்ணப்பம் மற்றும் விவரம் வேண்டுவோர் இசைப்பள்ளி அலுவலகத்தை 04175-235545, 9442507657, 8667399314 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்தின் பாரம்பரியம்மிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள மாணவ-மாணவிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.



0 Comments